விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

யாழ்ப்பாணப் புகையிலை வணிகத்திற்கு மலையாள இலக்கிய ஆதாரம்

2025-08-06 by விருபா - Viruba | 0 கருத்துகள்

சின்னக்குட்டியாரின் யாழ்ப்பாணப் புகையிலை தொடர்பான பதிவு (https://web.facebook.com/permalink.php?story_fbid=pfbid02zLjCoZz2spfADGYDkARq2t3WfXToxUfuSBL2xKJgLGkQQ9i5y5b4MW3Cw1H7Rnaql&id=61563805347421) இக்கரைப் பதிவு. அதாவது யாழ்ப்பாணத்தில் இயங்கிய சங்கம், இங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று முழுமையாகவும் நாமே நம்கதை கூறும் ஒருபக்கப் பதிவு.

இருவேறு நிலங்களைத் தொடர்புபடுத்திய ஒரு விடயத்திற்கு இரண்டு இடத்திலும் காணப்படும் வரலாற்று எச்சங்களைத் தொகுத்துக் கூறுவதலே அதனை முழுமையடையச் செய்யும்.
அந்தவகையில் யாழ்ப்பாணப் புகையிலை, கேரள மண்ணில் எவ்வாறு அணுகப்பட்டது, உள்வாங்கப்பட்டது, கொண்டாடப்பட்டது என்பதற்கு கேரளாவில் மலையாள மொழியில் உள்ள இலக்கியப் பதிவு தொடர்பிலானதே இப்பதிவு.
இந்த இலக்கியப் பதிவினைச் செய்துள்ளவர் இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் "காக்கநாடான்". ( https://en.wikipedia.org/wiki/Kakkanadan) காக்கநாடன் மலையாள மொழியில் எழுதியவற்றில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 15 சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுச் சாகித்திய அகாதமியினால் ''யாழ்ப்பாணப் புகையிலை'' என்ற தலைப்பில் 2010ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பின் முதல் சிறுகதையின் தலைப்பு - நூலின் தலைப்பாகவும் வைக்கப்பட்டுள்ளது.

Cover page from : MarinaBooks, Thank You

இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் என்ற ரீதியில் என். செல்வராஜா அவர்களின் நூல் தேட்டம் 16வது தொகுதியில் இந்நூலைப்பற்றிய பதிவும் இடம்பெறுகிறது.( https://noolthettam.com/15999-%e0%ae%af%e0%ae%be%e0%ae.../ ) எதிர்காலத்தில் யாரோ ஒருவர் ''யாழ்ப்பாணப் புகையிலை'' தொடர்பில் ஆய்வு செய்கிறாரெனில் நூல்தேட்டப் பதிவுனூடாக காக்கநாடனின் சிறுகதையையும் சென்றடையும், என். செல்வராஜா Nadarajah Selvarajah அவர்களுக்கு மிக்க நன்றி.
சரி, கதைக்கு வருவோம்.
காக்கநாடனின் மலையாள விபரிப்பு - நிர்மால்யாவின் தமிழாக்கத்தில் யாழ்ப்பாணப் புகையிலை தொடர்பில் காணப்படும் வாசகங்களை முதலில் தருகிறேன்.
பாட்டிக்கு வெற்றிலை போடவேண்டுமென்றால் முதல்தர யாழ்ப்பாணப் புகையிலைதான் வேண்டும்.
முதல் தர யாழ்ப்பாணப் புகையில கொண்டு வரலைன்னா உன்னைத் திரும்பவும் துரத்துவேன் கேட்டுக்க.
புகையிலை வாங்கி வந்து ஒப்படைத்ததும், பாட்டி அதை வாங்கிக் கவனமாகச் சோதிப்பாள். மேலும் கீழும் புரட்டிப் புரட்டிப் பார்ப்பாள். ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நான்கைந்து முறையாவது முகர்ந்து பார்ப்பாள்.
ஊஹூம் ஊஹூம். அந்த இப்ராஹிம் குட்டிகிட்ட போய்ச்சொல்லு, பாட்டிகிட்ட இந்த வெளையாட்டெல்லாம் வேணாம்னு, அவனைக் கொழந்தைலேர்ந்து பார்க்கிறேன். அவனோட வாப்பா வியாபாரம் தொடங்கறதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். இந்தா இந்தப் கள்ளப் புகையிலையை எடுத்துக்கிட்டுப் போய்க் குடு, இதுக்கு வீரியம் போதாது, செல்லத்தில ஒரு கழஞ்சுகூட இல்ல.
என்னோட புள்ளைக்குத் தெரியுமா?
யாழ்ப்பாணப் புகையிலயோட தரம்?
இதுக்கு என்ன மணம்!
என்ன வீரியம்!
என்ன உஷார்!
இதோட தரத்தாலேதானே பாட்டி இத்தனை காலமா சாகாம எந்தச் சுகவீனமும் இல்லாம இருக்கேன்?
இதனாலதான் இந்த யாழ்ப்பாணப் புகையில அத்தனை தூரத்திலேர்ந்து வருது, கடல்தாண்டி மறுகரையிலைர்ந்து. இதோட வீரியத்தை அனுபவிச்சா தான் தெரியும். சொல்லிப் புரிய வைக்க முடியாது.
இதுக்கு வீரியம் இருக்குதுங்கிறதுக்காக கொழந்தைங்க வெற்றிலை போடக்கூடாது. கன்னமும் இதயமும் துவண்டு போயிடும். கொஞ்சம் பெரியவனான பெறகு தொண்டையும், இதயமும் திடம் வெச்சபிறகு தொடங்கலாம். அப்ப எந்தப் பிரச்சனையுமில்ல.
உன் அப்பனுக்கு வெளிநாடு போக ஆசை. எங்கேன்னு தெரியுமா? இந்தப் புகையில வெளையிற நாட்டுக்கு. நிறையச் சம்பளம் கெடைக்கும்னு அவன் சொல்றான். அந்தக் கதையெல்லாம் வேணாம். புகையில இங்க வந்து சேர்ந்தா போதும். அங்க போய்ப் புகையில பயிர் பண்ண வேண்டிய தேவை எனக்கில்லைன்னேன். உன் அப்பன் அசடு வழிஞ்சான்.
பாட்டி மறைந்து சில காலம் கழிவதற்குள் குட்டிசேகரனின் தந்தை வேலை நிமித்தமாகப் புகையிலை நாட்டுக்குப் போனார். ஓராண்டு கழிந்து ஊருக்குத் திரும்பினார். விடுமுறை முடிந்து மீண்டும் கிளம்பும்போது குட்டி சேகரனையும் அவனது தாயாரையும் அழைத்துப் போனார். அவ்வாறு குட்டிசேகரன் புகையிலைத் தோட்டங்களின் ஊர்க்காரன் ஆனான்.
இனி,
என் சிற்றறிவிற்கு எட்டிய புரிதல்.
பட்டினப்பாலையில் வரும் ''ஈழத்துணவும்.. '' இன்னபிறவும் இரு கரைகளும் தமிழரின் கரைகளாகவிருந்த காலத்துக் கடல்வழி வணிகத்தின் சாட்சி என்றால், பிருத்தானிய இந்தியாவின் நடுக்கூறில் தமிழர்களின் இரண்டு கரைகளையும் இணைத்து நடந்த பாய்க்கப்பல் வணிகக் காலத்தின் சாட்சி இந்த யாழ்ப்பாணப் புகையிலை வணிகம். இலங்கையின் வடபகுதித் துறைமுகங்களூடாக நேரடியாக தென்-இந்தியத் துறைமுகங்களுக்கு இருகரைவாழ் வணிகர்களால் நடத்தப்பட்ட இந்த வணிகம், இருகரைத் தேவைகளைப் பூர்த்திசெய்தது எனலாம்.
Demand & Supply கோட்பாட்டிற்கமைய கூடிய தேவை இருக்குமிடம்நோக்கி வழங்கல் நடைபெறும். மலையாளக் கரைக்குத் தடையில்லாது வழங்கல் நடைபெற வேண்டுமெனில், அதிலும் கூடிய லாபம் கிடைக்கவேண்டுமெனில் குட்டி சேகரனின் அப்பா போன்றோர் ஈழத்துக் கரைகளில் குடியேறி, அங்குள்ள துறைமுகங்களையண்டிய கிட்டங்கிகளைக் குத்தகைக்கு எடுத்து வேண்டியவற்றை உள்ளூர் விலையில் கொள்முதல் செய்து, பாதுகாத்து வைத்து , கேரளத்திற்கு அனுப்பியதை வடபகுதித் துறைமுகங்கள் அறியும், கடல்வழி வணிகத்தில் ஈடுப்பட்டோர் அறிவர். இவ்வாறு இலங்கையின் வடபகுதியில் குடியேறிய கேரளர் நாளடைவில் உள்ளூரில் திருமண பந்தங்களில் ஈடுப்பட்டு, இன்று அவர்கள் முற்றிலும் தமிழர்களாகவே கரைந்துபோயினர் என்றே கூறலாம். அத்தகைய முன்னைக் கேரள பூர்வீகமும், தற்கால ஈழத் தமிழனுமான குட்டிசேகரனின் கதையே மேற்சொல்லப்பட்டது.
கேரளாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்குக் காரணம் - ''நிறையச் சம்பளம் கிடைக்கும்'' என்பது இக்கதையிலும் வருகிறது, ஒரு மலையாள எழுத்தாளரின் வாசகம் அது. இதுதவிர யாழ்ப்பாணத்திலிருந்த பல பாடசாலைகளில், கல்லூரிகளில் கேரளர்கள் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். எஸ். சிவலிங்கராசா Sithamparapilai Sivalingarajh அவர்களின் ''யாழ்ப்பாணத்துக் கல்வி வளர்ச்சியில் இந்திய ஆசிரியர்களின் பங்களிப்பு'' நூலில் சான்றுகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் காணப்படும் பணிக்கர் தெரு, பணிக்கர் கோயில் போன்றவைகளும் சாட்சிகள்தாம். யாழ்ப்பாணத்தில் ''நிறையச் சம்பளம் கிடைக்கும்'' என்பது இவர்களை ஈர்த்துள்ளது.
''பிருத்தானிய இந்தியா'' இல்லாதுபோய் இரண்டு புதிய நாடுகள் தோன்றித் தமிழர் கரைகளின் வணிகத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தன.
அதிலும் இலங்கை அரசானது இலங்கையின் வடபகுதித் துறைமுகங்கள், பிறதேசங்களுடன் நேரடி வணிகத்தில் ஈடுபடுவதைத் தடைசெய்தது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தமிழரின் கடல்வழி வணிகத்தை முடக்கியது.
தமிழர்கள் தங்கள் வணிகத்தினூடாகத் தன்னிறைவு அடைவதை சிங்கள அரசுகள் விரும்புவதில்லை. அதன்காரணமாகவே தமிழ்ப் பிரதேசங்களுக்குத் தனியான நடைமுறைகள், மறைமுகத் தடைகள். இலங்கையில் எந்த மாகாணத்திலும் காணப்படாத ஒன்று வடபகுதிக்கான ''மண்ணெண்ணை பர்மிட்'' என்பது சிறந்த எடுத்துக்காட்டு.
1957ஆம் ஆண்டில் கொழும்பில் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தின் கவனிப்புப் பட்டியலில் இருந்த விடயங்களில் ஒன்று - தமிழர்களின் கடல்வழி வணிகத்தை மீட்டெடுப்பது. ''நெடுங்காலமாக எமது நாட்டவர் இந்தியா, பர்மா முதலிய அயல்நாடுகளுடன் போக்குவரத்துச் செய்த கப்பற் சாதனங்கள் எங்கே? இவை ஏன் மறைந்தன? எம்மைச் சுற்றியுள்ள சிக்கல்களிற் சில இவை. இவற்றை ஆராய்ந்து குறைகளை நிவர்த்திக்க வழிவகைகளைக் காண்பது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பணியும் கடமையும்'' என்று தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தின் முன்னோடி ஆ.வி. மயில்வாகனார் அறிக்கை கூறுகிறது.
முற்போக்கு முகமூடியுடன் இயங்கிய சுயநலப் பித்தர் க. கைலாசபதி துணையுடன் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ் வளாகம் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டதுடன், 1957ஆம் ஆண்டில் இலங்கையின் நிர்வாக சேவையில், சபாநாயகர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் பணியாற்றிய பல தமிழர்கள் இணைந்து உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் அதன் இலக்கை அடையாது அமைதியடைந்தது.


புத்தகங்களை வகைப்படுத்திப் பொதிகட்டி வெளியேற்றுதல். - 1. மலாயா இடப்பெயர்வு.

2025-05-06 by விருபா - Viruba | 0 கருத்துகள்


வாசித்தலும், புத்தகச் சேகரிப்பும் தொடங்கும் காலத்தில் நல்லாத்தன் இருக்கும்.  ஆனால், அதில் வெள்ளை யானை வளர்பிலும் மேலதிகமான சுமையும், வலியும் உள்ளது. பிற்காலத்தில் எமது புத்தகச் சேகரத்திற்கு என்னவாகும் என்ற கவலை மனஅழுத்தம் தரும் ஒன்றகும். 

''பெற்ற பிள்ளைகளகளாவது தங்கள் கால்களில் நிற்பதற்கு பழகிக் கொள்வார்கள் - அவர்களுக்குக் கிடைத்த கல்வியின் மூலம்  தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள், ஆனால் நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களுக்கு என்னவாகும் என்ற கவலை என்னைச் சிலகாலம் வாட்டியது என்னவோ உண்மைதான், ஆனால் நான் இப்ப அதையிட்டு நான் கவலையடைவதை விட்டு ஒரு detachment & unlearning மனநிலைக்கு வந்துவி்ட்டேன்'' 

என்ற சச்சியின் சொற்கள் என் காதுகளில் இன்னமும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன என்றே சொல்லலாம். 

கொரோனா பொருந்தொற்றுக் காலத்தில் நான் இலங்கை திரும்பியிருந்த நிலையில் சச்சி நோய்த் தொற்றினால் மரணமடைய, அவரது பெறுமதிமிகு நூற்சேகரம்  யானை வாயில் சிக்கிய கரும்பாகிய செய்தியும் நூல்சேகரிப்பாளராக என்னை  இன்றும் வருத்திக்கொண்டிருக்கிறது.

வாசிப்புவெறிகொண்ட ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வகை நூல்களைத் தேடும் அல்லது வாங்கும் வேளையில் சில பிறவகை நூல்களையும் பின்னர் வாசிக்கலாம், பின்னர் கிடைக்காமலே போய்விடுமோ  என்ற அச்சத்தில் வாங்கி வைத்துக்கொள்ளும் ஒருவகை நோயின் தாக்கமும் ஏற்படுவதுண்டு. அதுவும் ஆய்வுப் பெறுமதியான நூல்கள் என்றால் அவற்றை வாங்காது விட்டுச் செல்வதென்பது முடியாத செயல். அவ்வாறாக நூற் சேகரத்தில் இணைந்த சில நூல்கள் வாசிக்கப்படாமலே தேங்கிக்கொள்ளும். 

சீ. ரா. ரங்கநாதனின் நூலக விதிகளின் சாரமாக ஒருநூல் தனக்குரிய வாசகனை அடைதலைத் தடுக்கும் ஒருவன், உண்மையில்  வாசகனாகவே இருக்கமுடியாதென்பது என் முடிபு. 

அந்தவகையில் தமிழர்களின் மலாயா இடப்பெயர்வை ஆவணப்படுத்தியிருக்கும் சில நூல்களைப் பொதிகட்டி வெளியேற்ற விரும்புகிறேன். ஏன் பொதிகட்டுதல் என்றால் - இதிலுள்ள 6 நூல்களை ஆறு வெவ்வேறான நபர்களுக்குக் கொடுப்பதால் எவருமே ஒரு முழுமையான வாசிப்பினை அடையமுடியாது, ஆகவேதான் பொதிகட்டல், ஒருவராவது முழுமையடையட்டும். 

இலங்கைத் தமிழர்களுக்கும், தனது மேற்படிப்பு ஆய்வுத் தலைப்பாக  ''மலாயா இடப்பெயர்வை''க்  கொண்டிருக்கும் ஆய்வு மாணவருக்கு (இலவசமாகவும்) முன்னுரிமை. நூல்கள் யாவும் யாழ்ப்பாணத்தில் உள்ளன.

அரிய நூல்களை விலை கொடுத்து வாங்க விரும்புகிறவர்களையும் வரவேற்கிறேன். 

சும்மா வெறுமனே ''மலாயா இடப்பெயர்வு'' தமது விருப்பிற்குரியதென்று கூறி இந்நூல்களைப் பெற்றுக்கொள்ள நான் இடம்தரமாட்டேன். இன்றைய திகதிக்கு முன்னராக அவர்களின் ''மலாயா இடப்பெயர்வு'' விருப்பிற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணம் ஒன்றினைக் காட்டுவது அவசியம். அது ஒரு சிறு கட்டுரையாகவோ அல்லது விருப்பமாகவோ ஏற்கனவே வெளிப்படுதிய அறிவிப்பு ஒன்றாக காட்டக்கூடியவாறு இருக்கவேண்டும். 

ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் இன்றி இவற்றைத் தருவது எனக்கு உடன்பாடானது அல்ல. (பெற்ற மகளைத் தக்க ஒருவனு்கு மணமுடித்துக் கொடுத்தலிலும் பார்க்க கவனமாக இருக்கவேண்டும்) 

யாழ் குடாநாட்டின் பலபகுதிகளிலிருந்தும் குறித்த தொகையானவர்கள் மலாயாவிற்குப் பெயர்ந்திருந்தபோதிலும் அவர்களைப் பற்றிய ஆய்வென்பது, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் முழுமையாக நடைபெறவில்லையென்பது என் அவதானிப்பு. 

80களில் உலகின் பல பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் மூன்றாம் தலைமுறைக்குப் பின்னரானவர்களைப் புரிந்துகொள்வதற்கு எமக்கு ஒரு வழிகாட்டியாக மலாயாவில் தங்கிவிட்ட அரியவகைத் தமிழர்களின் வாழ்க்கைப்பதிவுகள் அவசியம் என்பதாக நான் உணர்கிறேன். 

பொதியிலுள்ள நூல்கள் 

  1. "The Hundred Years of Ceylonese in Malaysia and Singapore"  - by Dr.S.Durai Raja Singam
  2. "The Legacy of the Pioneers - 125 years of Jaffna Tamils in Malaysia - by T.Selvaratnam & S.Apputhurai
  3. "The Legacy of the Pioneers - 125 years of Jaffna Tamils in Malaysia Volume II - by T.Selvaratnam & S.Apputhurai
  4. Glorious Malaya by S. Muthuthamby Pillai edited by Prof A. Veeramani. 
  5. மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை - ஜானகிராமன் மாணிக்கம்
  6. மலாயாக் குடிப்பெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் - சமாதிலிங்கம் சத்தியசீலன்
  7. (மலாயாவின் தோற்றம் -  பழனியப்ப செட்டியார்) நூல் உள்ளது, தேடி எடுக்கவேண்டும் 







மலாயா இடப்பயர்வு

ஆய்வடங்கல் - சொல்லின் பொருள் அறிந்து...

2025-03-11 by விருபா - Viruba | 0 கருத்துகள்

 

ஆய்வடங்கல்  என்றால் குறிப்பிட்ட பொருளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை வரிசைப்படுத்தித் தரும் பட்டியல் அல்லது குறிப்பிட்ட ஒரு ஆசிரியரின் படைப்புகள் பற்றிய அனைத்துப் பதிவுகளையும் தொகுத்துத் தரும் பட்டியல் என்று கூறலாம். 

தமிழில்,  மிகவும் அறியப்பட்ட ஆய்வடங்கல்கள்,

  • 1. கம்பன் ஆய்வடங்கல்
  • 2. மு. வ. ஆய்வடங்கல்
  • 3. அகிலன் ஆய்வடங்கல்
  • 4. தமிழ் அகராதியியல் ஆய்வடங்கல்
  • 5. ஜெயகாந்தன் ஆய்வடங்கல்

மு. வ. ஆய்வடங்கல் தொகுத்துத் தந்த பேராசிரியர் சு. வேங்கடராமன் அவர்கள் தந்துள்ள விரிவான விளக்கம் வருமாறு 

''ஆய்வடங்கல் - குறிப்பு விளக்கத்தொகை நூல் (Annotated Bibliography) என்பது ஒரு படைப்பு பற்றியோ, படைப்பாளர் பற்றியோ அமையும். இந்த நூல் இந்த நூற்றாண்டின் தமிழில் சாதனைகள் பல புரிந்து ஒல்லும் வகையெல்லாம் தமிழ் வளர்த்த சான்றோர் மு. வ. அவர்களின் படைப்புகளையும் அவற்றைப் பற்றிய பிறர் ஆய்வுகளையும் முறையாகத் தொகுத்துத் தரும் குறிப்பு விளக்கத்தொகை நூல்.''

இதில் பேராசிரியர் சு. வே ''Annotated Bibliography'' என்ற ஆங்கிலப் பொருளையும் தந்துள்ளதைக் காணலாம். 

ஆய்வடங்கல் ஒரு கருவிநூல் அல்லது நோக்குநூல். 

குறித்த பொருளில் அல்லது குறித்த ஆசிரியர் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரின் நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் அனைத்துத் தகவல்களைத் தருகிற வேலையை ஆய்வடங்கல் செய்கிறது. அது நூற்றொகை அல்லது ஆய்வுத் தொகுதி அல்லது ஆய்வுச் சுருக்கம் என்ற வகைநூல்களில் இருந்து வேறுபட்டது. ஆய்வடங்கலானது நோக்குநூல் வரிசையில்  நூற்றொகையையும் தாண்டிய கனதியானதும் வேலைச்சுமை கூடியதும் ஆகும். 

ஆய்வுச் சுருக்கம் - 

குறித்த கருத்தரங்குகளில் / மாநாடுகளில்  படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கத்தினைத் தருகிற நூல் - இது பெரும்பாலும் குறித்த கருத்தரங்கம் ஆல்லது மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் வெளியிடப்படும் வழிகாட்டி நூல். குறித்த தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையின் முன்னோட்டத்தினைச் சுருக்கமாகத்  தரும் நூல். 

ஆய்வுத் தொகுதி - 

குறித்த கருத்தரங்குகளில் / மாநாடுகளில் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெற்ற முழுமையான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல். இது பெரும்பாலும் குறித்த கருத்தரங்குகள்  / மாநாடுகள் நடைபெற்று சில காலம் சென்றபின்னர், பொதுவாக வரிசையில் அடுத்த எண்ணில் வரும் கருத்தரங்கில் / மாநாட்டில் வெளியிடப்படும். இது சிலவேளைகளில் ஓராண்டிற்கும் மேற்பட்ட கால இடைவெளிக்குப் பின்னரும் வெளியிடப்படலாம்.  

இந்நிலையில் 2023-2025 ஆண்டுகால இடைவெளியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான, தலைப்பில் ''ஆய்வடங்கல்'' என்ற சொல் காணப்படுகின்றதும் என் பார்வைக்குக் கிடைத்ததுமான 3 நூல்களைப் பற்றிய பதிவுகளைப் பார்ப்போம். 

  1. 2023 - யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல் : தேர்ந்த நூல் விபரப்பட்டியல்
  2. 2024 -  ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடு 2024 - ஆய்வடங்கல்
  3. 2025 - மூன்றாவது சர்வதேச இந்துமாநாடு - ஆய்வடங்கல்(Conference Proceedings)

இதில் முதலாவது நூல் ஓய்வுபெற்ற நூலகர் திரு. க. சௌந்தரராஜன் அவர்களால் தொகுக்கப்பட்டு வடக்கு மாகாணம் கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. ''தேர்ந்த நூல் விபரப்பட்டியல்'' என்ற சொல்லாடல் உணர்த்துவது யாதெனில் தொகுப்பாளர் தனக்குப் பார்வைக்குக் கிடைத்த பதிவுகளையே தந்துள்ளார் என்பதும், இதில் விடுபடல்கள் இருப்பின் அதற்குத் தொகுப்பாளர் பொறுப்பல்ல என்பதையும் அச்சொல்லாடல் மறைமுகமாகச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். நூல், சிறுநூல், சஞ்சிகைக் கட்டுரை, சிறப்பு மலர்க் கட்டுரை, பத்திரிகைக் கட்டுரை, தகவல், பிரசுரம், நூலின் பகுதி என்று நானாவித வளங்களில் இருந்து தொகுத்து இந்நூலினை உருவாக்கியுள்ளார். இந்நூலில் சில இடங்களில் தொகுப்புத் தவறுகள்  உள்ளன, எனினும் தொகுப்பளரின் முயற்சிக்கு பெரும் பாராட்டினைத் தெரிவிப்பது எம் கடமை. 

ஆய்வடங்கல் என்ற சொற்பதம் தந்திருக்கவேண்டிய கனதி நூலின் உள்ளடக்க விபரங்களில் இல்லை. ''Annotated'' வகைமையில் கட்டயம் காணப்படவேண்டிய குறிப்பிட்ட ஆக்கத்தின் மேலதிக விபரங்கள் நூலில் தரப்படவில்லை. தலைப்பில் நூற்றொகை என்ற பதம் கொடுத்திருக்கலாம். 

அடுத்த இரு நூல்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வு மாநாடுகளில் வெளியிடப்பட்டவை.  

ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகள் முழுமையான நிலையில் மாநாடு நடைபெறும் நாளிலேயே தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு ''ஆய்வுத் தொகுதி'' என்ற பெயர்கூட கொடுப்பதற்குக்கூட உண்மையான சில ஆய்வாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இடமுண்டு. காரணம் இவை யாவும் அரங்கில் வாசிக்கப்பட முன்னரே அதாவது ஆய்வாளர்கள் சபையில் அசலப்படாத நிலையில் உள்ளவை. சில கட்டுரையாளர்கள் அரங்கிற்கு வரவும் இல்லை, வாசிக்கவும் இல்லை. 

இவ்வாறு அரங்கேறி வாசிக்கப்படாமலும், அலசப்படாமலும் தொகுதிகளில்  கட்டுரைகள் இடம்பெறுவது மலின முனைவர்களுக்கும் கல்லாநிதிகளுக்கும் வேண்டுமானால் உவப்பாகவிருக்கலாம், ஆனால் ஆய்வுச் சூழல் மாசடையும் ஒரு நிகழ்வாகவே இதனைக் கொள்வதற்கும் இடமுண்டு என்பதை மறுக்கமுடியாது.  இங்கும் ஆய்வடங்கல் என்ற சொற்பதம் தேவையற்றது. 

அடுத்து இம்மாதம் யாழ் பல்கலையில் நடைபெற்ற மூன்றாவது  சர்வதேச இந்து மாநாடு - 2025. இதில் ''ஆய்வடங்கல் Conference Proceedings'' என்ற இருமொழித் தலைப்பு தரப்பட்டுள்ளது. உண்மையில் இது குறித்த மாநாட்டிற்கென ஆய்வாளர்களால் அனுப்பப்ட்ட ஆய்வுச் சுருக்கங்களின் தொகுப்பு. இதற்கு ஆய்வுச் சுருக்கம் என்பதே போதுமானதாகும். 

ஆய்வடங்கல் என்ற சொல்லின் பொருள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கும், இந்துக் கற்கைகள் பீடத்திற்கும் இடையிலேயே மாறுபடுகிறது. தமிழ்த்துறை - ஆய்வுத் தொகுதி என்ற பொருளில் பயன்படுத்துகிறது, இந்துக் கற்கைகள் பீடம் ஆய்வுச் சுருக்கம் என்று வெளியிடவேண்டியதற்கு ஆய்வடங்கல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.

அடிப்படைக் காரணம் இருதுறைகளுமே அறியப்பட்ட ஆய்வடங்கல் எதையும் பார்க்கவில்லை, அறிந்திருக்கவில்லையென்பதே.  

 





இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For